நாட்டிற்கு ஏற்படவுள்ள ஆபத்தை தடுக்க முடியாது! எச்சரிக்கும் வைத்தியர்.
நாட்டை முடக்கினாலும், பயணக்கட்டுப்பாடுகளை விதித்தாலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றினாலும் புதிய வைரஸ் பிறழ்வுகள் ஏற்படுவதை ஒருபோதும் தவிர்க்க முடியாது என வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது கூறப்படும் தென்னாபிரிக்க வைரஸான (சி.1.2) பிரதானமாக தனது எஸ் புரோட்டீன் தன்மையில் வேறுபாட்டை காட்டுகின்றது என கண்டறியபட்டுள்ளது. ஆகவே தான் இந்த வைரஸ் பரவினால் தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாது என கூறப்படுகின்றது.
இது வைத்திய நிபுணர்களின் சந்தேகமாக இருந்தாலும் அந்த சந்தேகத்தில் உண்மை உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இலங்கையில் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் புதிய வைரஸ் பரவலாம். அதற்கான அச்சுறுத்தல் நிலைமை அதிகமாகவே உள்ளது.
காரணம் என்னவெனில், இலங்கை சுற்றுலாத்துறையை பிரதானமாக கொண்ட நாடாகும். நாட்டின் பொருளாதாரத்தில் அதிக பங்களிப்பை சுற்றுலாத்துறை செய்கின்றது. ஆகவே நாடு திறக்கப்படும் நேரங்களில் சவால்கள் எமக்குக் காத்திருக்கின்றன.
எனவே தடுப்பூசிகளை நம்பியே எமது நீண்டகால வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. உலகில் 80 தொடக்கம் 90வீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றி இந்த வைரஸும் சாதாரண காய்ச்சல் தலைவலி போன்றது என்ற நிலையை உருவாக்கினால் மட்டுமே எம்மால் சாதாரண நிலைக்கு செல்ல முடியும் என்றார்.